தமிழ்நாட்டில் மக்கள் ஐடி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மக்கள் ஐடியை பலரும் ஐடி கார்ட் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்காக சர்வே, ஆய்வுகள் செய்யப்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதற்காக நேரடி சர்வே எதுவும் எடுக்கப்படாது. அதேபோல் ஆதார் கார்ட் போல கையில் கார்ட் எல்லாம் கொடுக்க மாட்டார்கள்.
மக்கள் ஐடி
இது தொடர்பாக ஐடி துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், இது முதல்வரின் கனவு திட்டம். அவர் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய முக்கியமான திட்டம். மக்களுக்கு தரவுகளின் அடிப்படையில் அரசு திட்டங்களை ஏற்படுத்தி கொடுப்பது. பல்வேறு துறைகள் உள்ளன, திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் எல்லாம் சாப்ட்வேரில் இருக்கிறது. இந்த திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைப்போம்.
எந்த திட்டம் யாருக்கு சென்றுள்ளது, யாருக்கு செல்லவில்லை என்பதை கண்டுபிடிப்போம். பயனாளர்களுக்கு திட்டங்கள் செல்லவில்லை என்றால், அதை அரசே உடனடியாக சென்று சேர வைப்பதும், பயனாளர்களுக்கு சென்று சேரவில்லை என்றால் அதை கண்டுபிடித்து அதில் குறைகளை சரி செய்வதும். திட்டங்கள் மூலம் பயன் பெறும் தவறான நபர்களை நீக்குவதும்தான் இதன் நோக்கம். இதற்காகவே முதல்வர் இந்த கனவு திட்டத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறார், என்று அமைச்சர் கூறியுள்ளார்.
விளக்கம்
மக்கள் ஐடி என்பது ஆதார் கார்ட் போல இருக்காது. ஆனால் இதில் ஆதார் விவரங்களும் இடம்பெற்று இருக்கும். இது மாநில குடிமக்களுக்கான ஒரு டேட்டா பேஸ் அடையாள எண் ஆகும். இந்த ஒரு டேட்டா பேசில் உங்களை பற்றிய எல்லா தகவலும் இருக்கும். உதாரணமாக கார்த்திக் என்ற நபரை எடுத்துக்கொள்வோம். கார்த்திக் என்ற நபருக்கு என்று ஒரு ஐடி கொடுக்கப்படும். இது அவரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அரசு அவருக்காக இந்த ஐடியை உருவாக்கி டேட்டா பேஸில் வைத்து இருக்கும். 12 இலக்கம் கொண்ட ஐடி ஆகும் இது.
இந்த ஐடியில் கார்த்திக் பற்றிய எல்லா தகவலும் இருக்கும். அவர் எங்கே படித்தார், அவரின் வருமானம் என்ன, அவர் ஏழையா,அவர் என்ன ஜாதி, இடஒதுக்கீடு இருக்கிறதா என்றெல்லாம் விவரங்கள் இருக்கும். அவர் பெற கூடிய திட்டங்களின் பயன்கள் என்னென்ன, அவர் வீட்டில் சிலிண்டர் எத்தனை உள்ளது, அவர் ரேஷனில் எவ்வளவு பொருட்கள் வாங்குகிறார் போன்ற விவரங்கள் எல்லாம் இருக்கும். ஒருவேளை அவர் ஏழையாக இருந்து, அவருக்கு ஏதாவது ஒரு அரசின் திட்டம் சென்று சேரவில்லை என்றால் அதை உடனே அவருக்கு வழங்க முடிவு எடுக்கப்படும்.
தமிழக அரசின் எல்லா திட்டமும் இருக்கும்
அரசின் 30 + துறைகளும் இந்த ஒரு எண்ணுக்குள் வந்துவிடும். அனைத்து துறைகளில் இருந்தும் ஒருவருக்கு கிடைக்கும் திட்டங்களுக்கான விவரங்கள் இந்த ஐடிக்குள் வந்துவிடும். அரசு அலுவலகங்களில் ஏதாவது திட்டத்திற்காக நீங்கள் சென்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது போன்ற சமயங்களிலும் கூட இந்த ஐடி மூலமாக உங்களுக்கு அந்த திட்டம் ஏற்புடையதா, நீங்கள் தகுதியானவரா என்று எளிதாக கண்டுபிடிக்க முடியும். அதே சமயம் கார்த்திக் வேற்று மாநிலத்தில் இருந்து வந்து தமிழ்நாடு திட்டங்களை பெறுகிறார் அல்லது பணக்காரராக இருந்து ஏழைகளுக்கான திட்டங்களை பெறுகிறார் என்றால் அதையும் கண்டிபிடித்து நீக்க முடியும் என்று தமிழக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.