தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் பதவியேற்க உள்ளார். ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் பதவி பிரமாணம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள், அதிகாரிகள், அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்களால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பணியாகும்.
அப்படியான தமிழ்நாட்டின் அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு ஆணைய உறுப்பினர்களின் பொறுப்பிடங்களானது, கடந்த நவம்பர் மாதம் நிறைவடைந்தது. இதற்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கையையும் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டு முறை புதிய தகவல் ஆணையர் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்ற நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தரை தேர்வு செய்து பரிந்துரை கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. அந்த பரிந்துரையை ஏற்ற ஆளுநர் ஷகில் அக்தரையும், மற்ற 4 உறுப்பினர்களையும் நியமிக்க உத்தரவிட்டார்.
தகவல் தலைமை ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் நான்கு பேரின் பதவியேற்பு விழா, ஓரிரு நாட்களில் சென்னை ராஜ்பவனில் கவர்னர் ரவி முன்னிலையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.