காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நடுவீரப்பட்டு கிராமத்தில் 7-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் சதீஷ்(35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ்வரி (43) என்ற பெண்ணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் லோகேஷ்வரியும், அவரது ஆதரவாளர்களும் கள்ளச்சந்தையில் மது விற்று வந்ததாக தெரிகிறது.
கள்ளச்சந்தையில் மது விற்பதை கைவிடுமாறு கவுன்சில் சதீஷ், லோகேஷ்வரி ஆதரவாளர்களிடம் பல முறை கூறி இருக்கிறார். ஆனால், அவர்கள் அதை சட்டை செய்யாமல் தொடர்ந்து கள்ளச்சந்தையில் மது விற்று வந்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் கவுன்சிலர் சதீஷ் அண்மையில் புகார் அளித்தார். இதனால் லோகேஷ்வரின் ஆதரவாளர்கள் கள்ளச்சந்தையில் மது விற்பதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும், இதுதொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த லோகேஷ்வரி கவுன்சிலர் சதீஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி, 20, 2022 இரவு சமாதானம் பேசுவதாக கூறி கவுன்சிலர் சதீஷை தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறார் லோகேஷ்வரி. அதனை நம்பி அவரது வீட்டுக்கு சதீஷ் சென்றுள்ளார். அப்போது லோகேஷ்வரியும், அவரது ஆதரவாளர்களும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சதீஷை சரமாரியாக வெட்டினர். இதையடுத்து, உயிரை காப்பாற்றுவதற்காக சதீஷ் அங்கிருந்து ஓடியுள்ளார். ஆனால் அவர்கள் விடாமல் துரத்திச் சென்று அவரை வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார்.