திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக 11 கிராமங்களில் 3200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கியது. விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சித்த தமிழக அரசை எதிர்த்து 161 நாட்கள் அமைதியான வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னைக்கு வந்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒரு நாள் அடையாள போராட்டத்தையும் விவசாயிகள் நடத்தினர். இந்த நிலையில் அவர்களுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய 20 விவசாயிகளையு்ம கைது செய்தனர். இவர்களில் 7 பேர் மீது திடீரென குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. இதற்கு கண்டனங்கள் எழுந்தன. கடந்த 18ஆம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடக்கவுள்ள நிலையில் விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
அப்போது விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழான நடவடிக்கையை 6 விவசாயிகள் மீது தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்தும் , விவசாயிகள் மீது போடபட்டுள்ள மற்ற வழக்குகளை நீக்கவும் இன்று விவசாயிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகிறார்கள். அது போல் வரும் 29ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.