சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சீனாலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய் மகள் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. இன்று அதிகாலையில் இலங்கையின் கொழும்பில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு ஏர் லங்கா விமானம் அதிகாலையில் வந்தது. விமானத்தில் பயணம் செய்த 70 பயணிகளுக்கும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து அவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகளுக்கு கொரோனா பரிசோதனை பாசிட்டிவ் என வந்துள்ளது. தற்போது கொரோனா பரிசோதனை பாசிட்டிவ் முடிவு வந்துள்ள தாய் மற்றும் மகள் சீனாவில் இருந்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் சீனாவில் வேலை செய்து வருகிறார். தற்போது பணி நிமித்தமாக அவர் ஜெர்மனி சென்ற நிலையில் சீனாவில் இருந்து தாய் மற்றும் மகள் இலங்கை வந்து அங்கிருந்து விமான மூலம் மதுரை வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.